வேலூர்: வேலூர் அருகே அரசு விழாவில், அமைச்சர் விஜய்க்கும், மேயருக்கும் மோதல் ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் அடுத்த கொணவட்டம் அரசு மேல் நிலைபள்ளியில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் விஜய் பொது மக்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.வேலூர் மேயர் கார்த்தியாயினிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இருந்தாலும் அவருக்கு கிடைத்த தகவல் படி விழாவுக்கு வந்தார்.அப்போது, மேயர் அமைச்சர் விஜயிடம், "மாநகராட்சி எல்லைக்குள் விழா நடக்கின்றது, என்னை ஏன் அழைக்கவில்லை' என, கேட்டார். அதற்கு அமைச்சர் விஜய், "விழாவுக்கு ஏற்பாடு செய்த அலுவலர்கள் அழைத்து இருப்பார்கள் என நான் நினைத்தேன். இது குறித்து அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்றார்.

மேயர் கார்த்தியாயினி அங்கிருந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமாரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல், ஏ.பி.ஆர்.ஓ., திண்டாடினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நடந்த சம்பவம் குறித்து, அ.தி.மு.க., மேலிடத்துக்கும், தமிழக முதல்வருக்கும், மேயரின் ஆதரவாளர்கள் ஃபேக்ஸ் கொடுத்துள்ளனர். இதையடுத்து, விழாவில் நடந்தது குறித்து விசாரணை நடத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், வேலூர் மாவட்ட, அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -