டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பஞ்சாப் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிக்கத் தயார் என்றும், அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரையும் பாஜக தெரிவிக்க மறுத்து வருகிறது. இந் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்றும், அதற்கு பாதல் ஒப்புதல் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இல்லையென்றாலும், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பாஜக முக்கியமாகக் கருதுகிறது.

இதனால் ஜனாதிபதி பதவிக்கு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் துணை ஜனாதிபதி பதவிக்காவது பாதலை முன்னிறுத்த பாஜக முயற்சி செய்யும் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவுடன் பேச்சு:

சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்துப் பேசியபோது பாதலை நிறுத்துவது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

அப்போது பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தில் கூட்டணியின் மற்ற கட்சிகளான பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக், பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமாரின் ஆதரவும் பாதலுக்கு உள்ளது.

இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு?:

இதற்கிடையே இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, ஜனாதிபதி தேர்தலில் கையாள வேண்டிய உத்திகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. இந்தக் கட்சிகள் பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்காது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் ஹமீத் அன்சாரியை இடதுசாரிகள் ஆதரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மம்தா எதிர்ப்பு:

இடதுசாரிகள் அன்சாரியை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஏட்டா போட்டி அரசியல் நடத்தி வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவரை எதிர்ப்பார் என்று தெரிகிறது.

இதையடுத்து மம்தாவுடன் அடுத்த சில நாட்களில் சோனியா காந்தி பேச்சு நடத்த தயாராகி வருகிறார்.

அன்சாரிக்கு லாலு ஆதரவு:

இந் நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம். ஹமீத் அன்சாரியை ஜனாதிபதியாக உயர்த்துவதுதான் நியாயமானது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

சங்மாவுக்கு பதவி வேண்டுமாம்:

இந் நிலையில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ. சங்மாவின் மகளும் மத்திய அமைச்சருமான அகதா சங்மா, பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராகவே தொடர வேண்டும் என்றும், தனது தந்தைக்கு அவர் வழிவிட வேண்டும் என்றும், இதுவரை ஒரு பழங்குடியின கிருஸ்துவர் ஜனாதிபதி பதவிக்கு வந்ததில்லை என்பதால் அவரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -