சென்னை,

மின்வெட்டால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மேல்நிலைப் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களை அரசே வாடகைக்குப் பெற்று வழங்கும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். இதற்கு
ஏற்படும் கூடுதல் செலவை அரசு ஏற்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே இந்த வசதி செய்து தரப்படும்.

அரசு அனுமதியின் பேரில் பள்ளிகள் பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் 5 கிலோ வாட் திறனை மீஞ்சக்கூடாது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த ஜெனரேட்டரை பயன்படுத்துவதால் ஆகும் ஒட்டு மொத்த செலவு மாதத்துக்கு ரூ.40 ஆயிரத்து 200ஐ தாண்டக்கூடாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டு மொத்த செலவு மாதத்துக்கு ரூ.26 ஆயிரத்து 800ஐ தாண்டக்கூடாது.

மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்கள், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு ஆகும் இந்த செலவுக்கான ஒப்புதலை அளிக்கும் இந்த செலவை அரசுப் பள்ளிகள் தங்களிடம் உள்ள பெற்றோர்- ஆசிரியர் சங்கநிதி, பள்ளி சிறப்புக்கட்டணம், ஆகியவற்றில் இருந்து செலவழித்துக் கொள்ளவேண்டும்.

இந்த செலவு முழுவதையும் பின்னர் அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் சொந்த செலவில் ஜெனரேட்டர்களை முதலில் வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் மாவட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அரசிடம் இருந்து செலவு தொகையை பெற்றுத் தருவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -