டெல்லி: வட இந்தியாவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் டெல்லியிலும் பலத்த அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் வீடுகள், கட்டடங்களை விட்டு அலறியடித்து ஓடி வந்தனர்.

இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்பட பல பகுதிகளில் நில அதிர்வு இருந்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளான காசியாபாத், நொய்டா, குர்கான் போன்ற இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

நில அதிர்வைத் தொடர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள், கட்டடங்கள், வீடுகளில் இருந்தோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு 5.1 ரிக்டர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சேத விவரம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ஹரியானாவில் நிலநடுக்க மையம்

இந்த நிலநடுக்கமானது ஹரியானா மாநிலம் பகதூர்கர் என்ற இடத்தை மையமாகக் கொண்டு உருவானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதியானது டெல்லியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -