சென்னை: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், விரட்டப்படுகிறார்கள். அவர்களின் உயிரைக் காப்பாற்ற தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பிய பேக்ஸ் கடிதம்:

தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, மனப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.

கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.

எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை தமிழர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் மகா அமைதியாக மெளனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக எந்தவிதமான ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை, கேரள வன்முறைகளை அவர் இதுவரை கண்டிக்கவில்லை, சாதாரண அணைப் பிரச்சினை இனப் பிரச்சினையாக மாறும் அபாயத்தைத் தடுப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட மத்திய அரசு இதுவரை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

தமிழகத் தலைவர்கள் கிட்டத்தட்ட அத்தனை பேரும் பலமுறை கோரிக்கை வைத்தும் கூட எந்தவித சலனமும் இல்லாமல் பிரதமர் அமைதியாக இருப்பது அனைவரையும் வியப்பிலும், விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -