கோழிக்கோடு: முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரளாவை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து பாஜக கேரள மாநில தலைவர் ஜார்ஜ் குரியன் கூறியதாவது,

முல்லை பெரியாறு பிரச்சனையில் தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக உள்ளது.இதனைக் கண்டித்து, கேரளாவை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு தர்ணா நடத்த வேண்டும். இதன்மூலம் கேரள காங்கிரசாரின் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி கட்சிகளால் தான் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு இடையே கடந்த சில வாரங்களாக தேவையற்ற பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது.

பி.ஜே.ஜோசப், கே.எம்.மணி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்த பிரச்சனையில் மக்களுக்கு ஆத்திரத்தை தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம், என்றார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -