பாலக்காடு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 10 நாட்களுக்குள் தீர்வு காணவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள நிதித்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தலைவருமான கே.எம்.மாணி பாலக்காடு அருகேயுள்ள மன்னார்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

கேரளா பின்வாங்காது

முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து அணு அளவு்ம் அரசு பின்வாங்காது. புதிய அணைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இடத்தில் அணைகட்ட யாருடைய முயற்சியும் தேவையில்லை. முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் 10 நாட்களுக்குள் மத்திய அரசு சுமுகமான ஒரு முடிவை எடுக்காவிட்டால் கேரள காங் (எம்) கட்சி 2ம் கட்ட போராட்டத்தில் குதிக்கும். இந்த போராட்டம் முதல் கட்டத்தை விட தீவிரமாக இருக்கும்.

இரண்டு நிலைப்பாடு

இந்த பிரச்சனையில் பிரதமரும், தேசிய கட்சியும் உடனடியாக தலையிட வேண்டும். தேசிய கட்சிகள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் ஒரு நிலைப்பாட்டையும், தமிழ்நாட்டில் ஒரு நிலை பாட்டையும் எடுக்க கூடாது. இதை மனிதாபிமான விஷயமாக கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -