ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என்று ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த காதல் அரசி, திருமணத்தன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு, மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தபிரியா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் மேட்டூரை சேர்ந்த கணேஷ் என்பவருடன் வசந்தபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.
கடந்த 19-ந் தேதி இருவருக்கும் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்யவும், பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக கடந்த 18-ந் தேதி இரவு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் வசந்தபிரியா தங்கியிருந்தார். திருமண நாளான, மறுநாள் அதிகாலை அவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனது மற்றொரு காதலனான ரமேசை பழனியில் திருமணம் செய்து கொண்ட வசந்தபிரியா மணக்கோலத்தில் நேற்று முன்தினம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வசந்தபிரியாவின் குடும்பத்தினரும், கணேசின் குடும்பத்தினரும் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு கணேசன் குடும்பத்தினர், தனது மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் திருமண ஏற்பாட்டிற்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை கொடுக்குமாறு வசந்தபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்துக்குப்பின் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்று விட்டார்கள்.
தன்னை காதலித்த காதலி திருமணத்தன்று ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதால், கணேஷ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
