காவலர் திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு

சென்னை,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற காவலர் திறனாய்வு
போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல்துறையினருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள்.சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்ற சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் எஸ். ரகுநாத்திற்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் செந்தில் ராஜ் அவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், தமிழ்நாடு கமாண்டோ படையைச் சேர்ந்த காவலர் ஏ. ஆனந்தராஜ் அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும்; புதுக்கோட்டை தலைமை காவலர் ஏ. முருகானந்தம் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி, அவர்கள் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டுமென்று வாழ்த்தினார்.