போதை பொருள் பயன்படுத்துவோர், இந்தியா முதலிடம்

ஐ.நா. சபையில் சர்வதேச போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு அறிக்கையை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.எஸ். மாலிக் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச கடத்தல்காரர்களால் ஹெராயின் தெற்காசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் கடத்தப்படுகிறது. தெற்காசியாவை பொறுத்தவரை இந்தியாவில்தான் அதிக அளவில் ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது.

அதன் பயன் பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இங்கு மட்டும் ஆண்டுக்கு 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. அதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரு நகரங்களில் உள்ள மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 30 லட்சம் பேர் இந்த போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் ஹெராயின் இங்கிருந்து வங்காள தேசம், நேபாளம், மற்றும் இலங்கைக்கு கடத்தப் படுகிறது. ஹெராயின் தவிர கோகைன், ஓபியம் போன்ற போதை பொருட்களும் இந்தியாவில் தாராளமாக கிடைக்கின்றன. 7,500 ஹெக் டேரில் சட்ட விரோதமாக ஓபியம் பயிரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.