A.A.K. என்டர்டைன்மென்ட் சார்பில் அசோக்கேணி தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாரிக்கும் புதிய படம் 'பிரசாத்'. இதில் நாயகனாக அர்ஜுன், நாயகியாக மாதுரி பட்டாச்சார்யா நடிக்க, டைட்டில் வேடத்தில் சங்கல்ப் என்ற சிறுவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறான்.
தனது 150 வது படமான இந்த பிரசாத்தில், தனது வழக்கமான ஆக்க்ஷன் பாணியிலிருந்து மாறுபட்டு செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார் அர்ஜுன். இது குறித்து அர்ஜுன் கூறுகையில், 'சாதாரண மெக்கானிக்கான நான் நமக்கென ஒரு ஆண் குழந்தை பிறந்தால் பிற்காலத்தில் நம் கஷ்டத்தை போக்குவான் என்று நினைப்பேன், அதன்படியே ஆண் குழந்தையும் பிறக்கும், ஆனால் பிறந்த குழந்தை வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தையாக பிறந்து விடுகிறது, அதை தொடர்ந்து நடக்கும் பாச போராட்டமே 'பிரசாத்' என்றார்.
இதில் பிரசாத்தாக நடித்துள்ள சங்கல்ப் படம் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் கண் கலங்க வைக்கப்போவது உறுதி, பெர்லின் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்ட இப்படத்தை பார்த்த அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது என்கின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தில் ஆக்க்ஷன், டூயட் கிடையாது. இசை இளையராஜா. இவர் தனது இசையால் இப்படத்தில் ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.
தனக்கு மிகவும் மனதிருப்தி தந்த படம் இது என்று சிலாகிக்கிறார் அர்ஜுன். 'பிரசாத்'தின் ஒளிப்பதிவு சஞ்சய் மால்கர், வசனம் பரணி, இயக்கம் மனோஜ் சதி.


