முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து கடந்த 10 நாட்களாக கொந்தளித்த தேனி பகுதியில் அமைதி திரும்புகிறது. கடைகள், பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் முல்லை பெரியாற்றுப் பிரச்சனை தமிழகமெங்கும் தொடர்ந்து வெடிக்கும் என்கிறது போராட்டக் குழுக்கள்!

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனால் அணையால் பயனடையும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் கொதிப்படைந்தனர்.

கடந்த 10 நாட்களாக முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காக்கவும், கேரள அரசைக் கண்டித்தும் தேனி மாவட்டத்தில் தமிழக எல்லையில் அமைந்துள்ள கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரிய கேரள அரசின் மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டாம் என்று தமிழக மற்றும் கேரள அரசுகளை நீதிபதிகள் வலியுறுத்தினர்.

உத்தரவு பற்றி தகவல் அறிந்த போலீசார் நேற்று மாலையிலேயே அதை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழக மக்களிடம் தெரிவித்தனர். இந்த தீர்ப்பைக் கேட்டதும் அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தினர். மேலும் போலீசார் நேற்று மாலை தேனி மாவட்டத்தில் கிராமம், கிராமமாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்களி்ககுத் தெரிவித்தனர்.

கம்பம், சின்னமனூர், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, காமய கவுண்டன்பட்டி உள்பட 27 பேரூராட்சிகள், 32 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு சென்று தண்டோரா போட்டும் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க உச்ச நீதமன்றம் அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தேனி மாவட்டத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியுள்ளது.

உத்தமபாளையம், கம்பம், கூடலூர், போடி, கோம்பை, தேவாரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் திறக்பப்ட்டன. மேலும் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

கடந்த 10 நாட்களாக முடிங்கியிருந்த பேருந்து போக்குவரத்தும் இன்று துவங்கியது. ஆனால் தேனி வழியாக கேரளாவுக்கு வாகன போக்குவரத்து துவங்கவில்லை.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -