போடி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா நடந்து வரும் விதத்தைக் கண்டித்தும், அணையின் நீர்மட்டத்தை அதன் உண்மையான அளவுக்கு உயர்த்தக் கோரியும் தமிழக விவசாயி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சமீபத்தில் கம்பத்தில் நடந்த போராட்டத்தின்போது ஒருவர் தீக்குளித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் இன்னொருவர் தீக்குளித்துள்ளார்.

போடி நாயக்கனூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் ஒரு விவசாயி. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த ராஜ், கேரள அரசைக் கண்டித்தும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கோரியும் தீக்குளித்து விட்டார்.

உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் போடியிலும், தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -