தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் நடந்து கொண்டிருக்கும் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க. ஸ்டாலினை தாக்கிப் பேசியதும் அந்த நிகழ்ச்சியை நிறுத்தியது சன் நியூஸ்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் நேரடி ஒளிபரப்பு சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக விஜயகாந்த் கேரள அரசையும், வாக்களித்த மக்களை வாட வைக்கும் அதிமுக அரசைத் தாக்கிப் பேசிய போதும் ஒளிபரப்பு தெள்ளத் தெளிவாக இருந்தது. ஆனால் அவர் திமுக பொருளாளர் மு. க.ஸ்டாலினைப் பற்றி பேசியபோது டிவியில் விஜயகாந்த் வாய் அசைவது மட்டும் தான் தெரிந்தது. பேசியது கேட்கவில்லை. காரணம் சன் நியூஸ் நிறுவனம் ஒலியை முழுவதுமாகக் குறைத்துவிட்டது.

பிறகு மறுபடியும் ஒலி வந்தது. அப்போது விஜயகாந்த் பேசியதாவது,

நான் வரும் வழியில் பேனர் ஒன்றைப் பார்த்தேன். அதில் திமுக தலைவர் கருணாநிதியை வாழும் பெரியாரின் வாரிசு என்று கூறப்பட்டுள்ளது. பெரியார் கருப்பு துண்டு போட்டிருந்தார். இவரோ மஞ்சள் துண்டு போட்டிருக்கிறார். அப்படி இருக்கையில் எப்படி வாரிசாக முடியும் என்றார்.

அடுத்து அவர் என்ன பேசினார் என்று கேட்கவில்லை. ஏனென்றால் மறுபடியும் ஒலியில்லை. ஓரிரு நிமிடத்தில் நேரடி ஒளிபரப்பை நிறுத்திவி்ட்டனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -