மதுரை: காவிரி பிரச்சனையில் இரு மாநிலத்திலும் பதட்டம் நிலவிய போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 2 மாநில முதல்வர்களை அழைத்து பேசி சுமூக நிலையை ஏற்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள பிரதமருக்கு அந்த துணிச்சல் இல்லை என்று பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து மதுரையில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தேசிய கட்சிகள் மாநில பிரச்சனையில் தலையிடுவது இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. தேசிய கட்சிகளுக்கும் மாநில பிரச்சனையில் அக்கறை உள்ளது. அதனால் தான் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மக்களின் கருத்தோடு அந்த மாநில பாஜகவும் ஒத்த கருத்தை கொண்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும் தமிழக மக்களின் கருத்தோடு தமிழக பாஜக ஒத்த கருத்தை கொண்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழகத்தில் கேரளத்தவர்கள் தாக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே முல்லை பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காவிரி பிரச்சனையில் பதட்டம் நிலவியது. அப்போது வாஜ்பாய் இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூக நிலையை ஏற்படுத்தினார். ஆனால் இப்போது உள்ள பிரதமருக்கு அந்த துணிச்சல் இல்லை. முல்லை பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -