- Back to Home »
- அன்னா ஒரு பயங்கரவாதி: பெரியார் தி.க. தாக்கு- கருப்புக் கொடி காட்டி போராட்டம்
சென்னை: ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்த ஆரம்பித்த பின்னர் சென்னைக்கு முதல் முறையாக வந்த அன்னா ஹசாரேவுக்கு பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் அன்னா ஆதரவாளர்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று சென்னை வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டின. எங்கு சென்றாலும் அன்னாவுக்கு பேராதரவு கிடைத்து வரும் நிலையில் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி தான். இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று பெரியார் தி.க.வினர் குற்றம் சாட்டினர்.
இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அன்னா ஹசாரே விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அன்னாவுடன் கிரண் பேடியும் உடன் வந்திருந்தார்.
பின்னர் மாலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். அவருடன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரண் பேடி ஆகியோரும் பேசினர்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரே, பெங்களூர் வந்திருந்தார். அங்குள்ள ப்ரீடம் பார்க்கில் நடந்த கூட்டத்தி்ல் அவர் பேசினார். அவரைப் பார்க்க சுமார் 15,000 பேர் குவிந்திருந்தனர். அங்கு அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார்.
ஊழலுக்கு எதிராக ஊர், ஊராகப் பிரச்சாரம் செய்து வரும் அன்னா செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அமோக ஆதரவு தந்து வந்துள்ள நிலையில் தமிழகத்தில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.