நெய்வேலி: நெய்வேலியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்து வேண்டும் என்று பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை மையமாக வைத்து கேரளாவில் வாழும் தமிழர்களையும், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களையும் மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு உணர்வுப் பூர்வமாகவே கையாண்டு வருகிறது.

தமிழக மக்களின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் முதல்வர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இந்த தீர்மானத்தை, மத்திய அரசு வழக்கம் போல் குப்பைக் கூடையில் போடாமல் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கேரளாவிற்கு என்.எல்.சி.யிலிருந்து மின்சாரம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில், எனது தலைமையில் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

வேல்முருகனின் இந்த எச்சரிக்கையை அடுத்து என்.எல்.சி.யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -