முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அணையின் கொள்ளளவை 120 அடியாகக் குறைக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், கடந்த 6 மாதங்களில் பல முறை பூகம்பம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக 120 அடியாகக் குறைக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள அரசு கோரியுள்ளது.


ஏற்கனவே, அணை அமைந்துள்ள இடுக்கி பகுதி மக்கள் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், அணையின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், தமிழகம் அணையின் கொள்ளளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனு இன்று, நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு ஆய்வுக்கு வந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஏற்கனவே ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு ஆய்வில் இருப்பதால், இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்க முடியுமா என்று தெரியவில்லை என நீதிபதி ஜெயின் தெரிவித்தார். கேரளம் மற்றும் தமிழகம் சார்பில் மொத்தம் நான்கு மனுக்கள் இருப்பதால், அவற்றை விசாரிக்கலாமா என்பது குறித்து பதிவாளர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவரிடம் அது தொடர்பாக கோரிக்கை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
டேம் 999: நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள "டேம் 999" என்ற திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கப்பட்டது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்ச், அந்தப் படத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்குமாறு இயக்குநர் சோஹன் ராய்க்கு உத்தவிட்டது.

வரும் 12-ம் தேதி அவர் தமிழக அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு விளக்கமளிக்க வரும்போது, அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்பிறகு, வரும் 16-ம் தேதி தமிழக அரசு தனது முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்ட டேம் 999 திரைப்படம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், இரு மாநிலங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி, தமிழக அரசு அந்தப் படத்தைத் திரையிட தடை விதித்தது. அதை எதிர்த்து, சோஹன் ராய் உச்சநீிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனிடையே, இந்த மனு நேற்று டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு ஆய்வுக்கு வந்தபோது, அதை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றுவதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு தான் தலைமை வகிப்பதால், "டேம் 999" தடை தொடர்பாக தான் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்று நீதிபதி ஜெயின் அதிலிருந்து விலகிக் கொண்டார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -