கோவை: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரளா நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ஜனநாயக கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து வாளையாரை அடுத்த ஆத்துபதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல்வீசினர். இதில் பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இரவு 10.15 மணி அளவில் நடந்தது.

இதே போன்று அன்றிரவு 11 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வந்த தமிழகப் பேருந்து நரிமேடு அருகே வந்தபோது காரி்ல் வந்தவர்கள் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

மேலும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற கேரள அரசுப் பேருந்து இரவிபுதூர்கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதே போன்று குமரி மாவட்டத்தில் கேரள அரசுப் பேருந்தை சிறைபிடித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியினர் திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீர் என்று ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக்க கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்காக சிலர் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு ரயில் வந்தபோது அதில் ஏறினர். ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைய 2 கிமீ இருக்கும்போது அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி சுமார் 25 நிமிடம் போராட்டம் நடத்தினர். ரயில் மறியலில் ஈடுபட்ட 253 பேர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக சென்னை மைலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மலையாளிகளின் குளிர்பான கடையும், ஒரு தேனீர் கடையும் அடித்து நொறுக்கப்பட்டன. வேறொரு இடத்தில் மலையாளியின் கடை என்று நினைத்து தங்கராஜ் என்பவரின் கடை தாக்கப்பட்டது. இது குறித்து மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவர் ஐயப்ப பக்தர் ஆவார். அவரது மாலையை போலீஸ் அதிகாரி அறுத்துவிட்டதாகவும், அவரை அரை நிர்வாணமாக்கி அறையில் அடைத்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் மைலாப்பூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மார்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து அந்த மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு மற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த மார்க்கெட்டில் உள்ள 1,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன, அங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளும் அனுப்பப்படவில்லை.

மதுரை, சிவகாசி, சிவகங்கையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கோவையில் மலையாளி ஒருவருக்கு சொந்தமான மருத்துவமனையை தாக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதே போன்று ஆப்பக்கூடல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -