முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் நியமித்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம், டில்லியில் இன்று நடந்தது. தமிழகம் கேரள அரசு சார்பில் வக்கீல்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த மாதத்தில் கமிட்டியில் உள்ள 2 பேர் அணை அமைந்திருக்கும் பகுதிக்கு சென்று பார்வையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் காலையில் கேரளா தரப்பில் அணைபகுதியில் நில நடுக்கம் தொடர்õபான விஷயத்தை இந்த குழு ஆராய வேண்டும் என்றும் , புதிய அணை கட்டுவதற்கு ரூ. 600 கோடி செலவழிக்க கேரள அரசு தயாராக இருப்பதாகவும், இந்த அணை 3 ஆண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை குழுவும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் அணை தொடர்பாக பல குழுக்கள் வழங்கிய ஆய்வறிக்கையை தர வேண்டும் என கேட்டபோது குழு அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். அணை பலம் பாதுகாப்பு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் கொடுத்துள்ளது. பின்னர் இரு தரப்பு வாதங்களுக்கு வரும் ஜன. 2 மற்றும் 3 ம் தேதிகளில் மீண்டும் கூடுகிறது. இதனால் இன்று முடிவுகள் எதுவும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த குழுவின் இறுதி பரிந்துரைகள் தள்ளிப்போகிறது .

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு: இதற்கிடையில் தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முல்லை பெரியாறு அணை இரு மாநில பிரச்னையாக இருப்பதால் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பேட்டி: இதற்கிடையில் இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெ., முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு 3 முறை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பாதுகாப்பு தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இந்த அணையில் அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்துடன் ஒன்று பட்டு இருப்பதால் சட்டசபையை சிறப்பாக கூட்ட வேண்டியதும், தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமுமில்லை. என்றார்.

அதிகார குழுவின் தலைவர் நீதிபதி ஆனந்த் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது இறுதி தீர்ப்பை இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, கடந்த 2006ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அணை அமைந்துள்ள இடத்தை தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு விடப்பட்ட குத்தகை செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை செயல்படுத்தாமல் தடுக்கும் வகையில், கேரள சட்டசபையில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது, பல்வேறு பெஞ்சுகள் விசாரணை நடத்தி, இறுதியில், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவில், கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ் மற்றும் பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் மற்றும் பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழக அரசு, அணை தொடர்பான ஒப்பந்தம் குறித்தும், அணை உடைந்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாதுஎன்பது குறித்தும் ஆதாரங்களை தாக்கல் செய்தது.

கேரளாவின் நிர்பந்தம் காரணமாக, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிரதமர் உத்தரவின்படி, மத்திய நீர்வள அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதிகாரப்பூர்வமற்ற முறையில், டில்லியில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கேரளா மற்றும் தமிழக பொதுப்பணித் துறை செயலர்களை இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, நீர்வள அமைச்சகம் அழைப்பு விடுத்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள கமிட்டியின் கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதை திசை திருப்பும் வகையில், அதிகாரிகள் கூட்டத்தை நடத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று புறக்கணித்துள்ளது.

அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகாரம் கொண்ட குழுவின் கூட்டத்தில், தமிழக அரசு கலந்து கொண்டது. ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதி வாதங்கள் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் நடக்க உள்ளன. இதன்பின், குழுவின் தலைவர் நீதிபதி ஆனந்த், தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப் பிப்பார். அதனடிப்படையில், இப்பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -