பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள். தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை மிகவும் குழப்பி வந்தனர்.

ஆனால், தேவர் திருமகனாரோ, பெருமான் போன்ற ஞானிகள் அடைந்த நிலை எத்தகையது, என்பதை கடந்த 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் நாள் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மகாநாட்டில் பேருரை நிகழ்த்தி, வள்ளல் பெருமான் அடைந்த உண்மை நிலையினை அனைவரும் அறியச் செய்தார்.

தேவர் திருமகனாரின் அந்தப் பேருரை “அருள் மறை தந்த வள்ளலார்” என்ற தலைப்பில் புத்தகமாக, (ரூ.10) கடந்த 2008 டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. ஆன்மீகத்தில் தேவர் பெருமகனார் எந்த அளவிற்கு உயர்ந்த நிலையில் இருந்தவர் என்பதற்கு,. இந்தப் பேருரை ஒரு சான்றாகும்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரின் வீடுகளிலும் சன்மார்க்க சங்கங்களிலும் இருக்க வேண்டிய ஒரு அருமையான நூல் இதுவாகும்.

மதுரை மாவட்டச் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள், இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கெனப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

அந்தப் புத்தகத்தின் முன், பின் அட்டைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், தேவர் திருமகனாரின் உருவச் சிலை எழுப்பப்பட்டு, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.




அவரைப் பற்றி, தலைவர்கள் பலரின் கருத்துக்கள் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தேவர் மண்டபத்தின் சுவற்றில் அனைவரும் அறியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -