இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.

1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடு நாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். ‘கனத்த புகழ்படைத்த காளிக் குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்’ என்று பாடுவதும் உண்டு.

ஐதராபாத்து நைசாம் ( ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.

மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த பெயர் பெற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன. நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர் . இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுன்னிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றிபெறுவார் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது

எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது.

இவர் மதவிடங்களில் மிகப்பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின்உள்விவகாரங்களை மறந்துவிடாது கவனித்து வந்திருக்கின்றார். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். ராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமையுறச் செய்தவர் இம்மன்னரேயாவார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -