குற்றப் பரம்பரை: பின்வாங்கிய வசந்தபாலன்!

இயக்குனர் பாரதிராஜாவிடம் பேட்டி என்று போய்விட்டால் ஒரு விஷயத்தைச் சொல்ல மறக்க மாட்டார். தனது திரை வாழ்க்கையின் கனவே குற்றப் பரம்பரை வரலாற்று நிகழ்வைப் படமாக்குவதுதான் என்று உணர்ச்சி பொங்கப் பேசுவார்.
கடந்த 25 ஆண்டுகளாகக் குற்றப் பரம்பரை நிகழ்வு பற்றி ஆராய்ந்து திரைகதை எழுதியிருக்கிறாராம். “குற்றப் பரம்பரை ஸ்கிரிப்டை நேரம் வாய்க்கும்போதெல்லாம் மேலும் மேலும் மேருகேற்றிக்கொண்டே இருக்கிறார். நல்ல மூடில் இருந்தால் எங்களைக் கூப்பிட்டுக் கதையில் இடம்பெரும் காட்சிகளைப் பற்றிச் சொல்லி அழுதுவிடுவார்” என்று சிலாகிக்கிறார்கள் தற்போது மற்றொரு மண்வாசனைக் கதையை படமாக்கத் தயாராகிவிட்ட பாரதிராஜாவின் உதவியாளர்கள். பிரபல காதல் கவிஞர் ஜோ மல்லூரி, இப்போது பாரதிராஜாவின் உதவியாளராக இருகிறார் என்பது உபரித் தகவல்.

குற்றப் பரம்பரையோடு தொடர்புடைய இப்போதைய செய்தி ரொம்பவும் ஹாட்டாகவே நம் காதுகளை எட்டியது. வசந்தபாலன் நேற்று தொடங்கிய அரவான் படம், சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற மதுரை வரலாறு கூறும் நாவலின் ஒரு பகுதியிலிருந்து உருவாக்கப்படுகிறது. சு. வெங்கடேசன் அரவான் படத்திலும் கதாசிரியராகப் பணியாற்றுகிறார். முதலில் நாவலில் இடம்பெற்றுள்ள குற்றப் பரம்பரை நிகழ்வை மட்டும் படமாக்குவது என்று முடிவு செய்து களமிறங்க, உடனடியாகத் தகவல் பறந்திருகிறது பாரதிராஜாவுக்கு. 

“தம்பி, குற்றப் பரம்பரையில் நானும் ஒரு பாத்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இது ஊருக்கே தெரியுமே” என்று அன்பாகச் சொன்னாராம். இதைக் கேட்டு முதலில் வம்பாக முறுக்கிக் கொண்டாராம் வசந்த பாலன். பிறகு கனவுலகில் இருந்து சுயநினைவுக்கு வந்த இயக்குனர், சீனியர் பாரதிராஜாவின் ஸ்கிரிப்டை பற்றி அவரது முன்னாள் உதவியாளர்களிடம் விசாரிக்க, அவர்களும் சொல்ல அதிர்ந்தே போனாராம். அதிர்ச்சிக்குக் காரணம், திரைக்கதைக்காக தேசிய விருது பெற்ற பாரதிராஜவின் ஸ்கிரிப்டில் குற்றப் பரம்பரை நிகழ்வு வலிமையாகச் சொல்லப்படிருந்ததுதானாம். தன் கதாசிரியரை ஆலோசித்த வசந்த பாலன், குற்றப் பரம்பரை நிகழ்வில் ஒரே ஒரு முக்கியப் பாத்திரத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, அரவானை ஒரு பீரியட் லெஜெண்டரி கதையாக எடுத்துவிடுவது என்று முடிவு செய்தவர், குற்றப் பரம்பரை நிகழ்வுக்குள் முழுமையாக நுழையாமல் பின்வாங்கிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து! 

எது எப்படியோ, குற்றப் பரம்பரை கனவை மருதநாயகம் பட்டியலில் சேர்த்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!