திராவிடத்தை காப்பாற்ற
ஒரு கருணாநிதி போனாலும்,
பல கருணாநிதிகள் வருவார்கள், கருணாநிதி பேச்சு

சென்னை, 


திராவிட இயக்க 100-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசியதாவது,

நூறாண்டு முடிகின்ற தருவாயில் நம்முடைய இயக்கம் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரால் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நாம் திராவிடர்கள் என்று திராவிட இயக்கம் என்பதற்கு ஆண்டு விழா நடத்துகிறோம் என்று சொல்கிற காரணத்தால், தமிழனை மறந்துவிடவில்லை. தமிழ் மொழியை மறந்து விடவில்லை. நம்முடைய இனத்தை இங்கே மறக்காமல் இருக்கிறோம் என்பதற்காகத்தான் இதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அது மாத்திரமல்ல; 8-3-1942ல் அண்ணா திராவிட நாடு இதழைத் தொடங்கியபோது ஐந்து நாட்கள் ஒரு தொடர் தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கத்தில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.

அன்றியும் திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடம் என்று மாறிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.

உதாரணமாக, 1926-ல் டி.ஏ. சாமிநாதய்யர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம்டிக்ஷனரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடு என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் - திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை என்று அப்போதே விளக்கம் அளித்துள்ளார்.

இது சாதாரண இயக்கமல்ல, நூறாண்டுகள் கடந்த இயக்கம் என்று சொன்னார்களே, இன்னும் சொல்லப் போனால் 1885&ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது என்றால், அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 1847-ம் ஆண்டிலேயே திராவிட தீபிகை என்ற தமிழ் இதழ் தமிழகத்திலே நடத்தப்பட்டிருக்கிறது.

ஆக, திராவிட என்கின்ற சொல், நானோ, பேராசிரியரோ, மேடைகளிலே இருக்கின்றவர்களிலே யாரோ ஒருவர் கண்டுபிடித்த சொல் அல்ல. தேசிய கீதம் யார் எழுதிய பாட்டு? இது நான் எழுதிய பாட்டா? இல்லை ரவிந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம். அந்தப் பாடலிலே இருக்கிறது, திராவிட என்கின்ற சொல். நாங்கள் யாரும் புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. பழைய வார்த்தை. பழைய இனம் பற்றிய வரலாற்று வரி. இது ஆட்சி மாற்றத்திற்காகவோ அல்லது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதற்காகவோ அல்லது இருக்கின்ற ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவோ நடத்தப்படுகின்ற கூட்டம் அல்ல.

இது எழுந்த இனம் - திராவிட இனம். இன்றைய தினம் அந்த வரலாற்றுப் புகழை மறந்து விட்டு, புதைக்கப்படுமேயானால் மீண்டும் எழுவதற்கு எத்தனை ஆண்டுக் காலம் ஆகும் என்ற அந்தக் கவலையினால்தான் இப்பொழுதே தூக்கி நிறுத்த இந்த நூறாம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூக நீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல, இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.

இதையும் அழிப்பதற்கு, இன்றைய தினம் எல்லா பக்கமிருந்தும் நமக்கு பயமுறுத்தல்கள், நமக்கு அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம், நம்முடைய வழியில் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும், அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

தொடங்கி விட்டோம் தோழர்களே! தொடர் போராட்டம் தொடங்கிவிட்டோம். ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே என்று பரணி பாடிய கருணாநிதி; 13 வயதிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக - ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக - தமிழ்க் கொடி பிடித்து தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் கருணாநிதி.

இன்றைக்கும் அந்த கருணாநிதியினுடைய பரம்பரை கருணாநிதியினுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, அப்போது கேட்ட திராவிட நாடு திராவிடர்க்கே என்ற குரல் மீண்டும் ஒலிக்காமல் இருக்க நாம் நிச்சயமாக வெற்றியை ஈட்டுவோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.