போடி அருகே மலையாளிகள் வீடுகள், தோட்டத்திற்கு தீ: பதற்றம்

போடி அருகே மலையாளிகளின் தோட்டம், வீடு, பண்ணை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை கம்பம் திமுக எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை மலையாளிகள் சேதப்படுத்தினர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போடி அருகே மலையாளிகளின் தோட்டம், வீடுகள் ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் உள்ள மலையாளிகளின் தோட்டம், வீடு, மற்றும் பண்ணை வீடு ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயைணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், டிஎஸ்பி பி.சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

இதேபோல் போடியில் இருந்து கேரளா செல்லும் பாதையில் உள்ள மத்திய அரசின் நறுமன வாரிய அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டித்து அவர்கள் மத்திய ஏலக்காய் நிறுவன அலுவலகத்தை கற்கள் வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.